சீறிப்பாயும் சந்திராயன் 2 விண்கலம், நீளும் இஸ்ரோவின் சாதனைப் பட்டியல்!

நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வுக்குள்ளாக்க, 'சந்திரயான் - 2' விண்கலத்தை இந்தியாவின், 'இஸ்ரோ'  இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், இன்று திட்டமிடப்படி விண்ணில் செலுத்தவுள்ளது. ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு விட்டதாக, 'இஸ்ரோ' விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

இஸ்ரோ நிறுவனம், நாட்டின் தகவல் தொடர்பு, வானிலை உள்ளிட்ட ஆய்வுகளுக்காக, பி.எஸ்.எல்.வி., - ஜி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட்கள் உதவியுடன், செயற்கைக்கோள்களை, விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது.
 நிலவின் தென் துருவ பகுதியில் உள்ள கனிம வளங்கள் மற்றும்  மக்கள்
வாழ சாத்தியம் உள்ளதா என ஆய்வு மேற் கொள்ள,'சந்திரயான் - 2' என்ற விண்கலத்தை, இஸ்ரோ, உருவாக்கியுள்ளது. 
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிவுலுள்ள, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து, சந்திரயான் - 2 விண்கலத்தை சுமந்தபடி, 'ஜி.எஸ். எல்.வி., மாக் 3 - எம்1' ராக்கெட், 15ம் தேதி, அதிகாலை, 2:51 மணிக்கு,விண்ணில் பாய இருந்தது.

அப்பொழுது ராக்கெட் ஏவுவதற்கு, 56 நிமிடங்கள், 24 வினாடிகள் இருந்த நிலையில், ராக்கெட்டில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறை, விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இதனால், சந்திரயான் - 2 விண்கலம் ஏவும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தற்போது, ராக்கெட்டில் ஏற்பட்ட கோளாறு சரிசெய்யப்பட்டு விட்டது. 
மேலும் மீண்டும் சதீஷ் தவான் மையத்தின் ஏவுதளத்தில் இருந்து, சந்திரயான் - 2 விண்கலத்தை சுமந்தபடி, 'ஜி.எஸ்.எல்.வி., மாக் 3 - எம் 1' ராக்கெட், இன்று மதியம், 2:43 மணிக்கு, விண்ணில் பாய்கிறது. இதற்கான, 'கவுன்ட் டவுன்' நேற்று மாலை, 6:43 மணிக்குதுவங்கியது குறிப்பிடத்தக்கது.


இதுகுறித்து, இஸ்ரோ தலைவர் சிவன், சந்திரயான் - 2 விண்கலம், விண்ணில் ஏவுவதற்கான, அனைத்து பணிகளும் தயார் நிலையில் உள்ளன.கடந்த, 15ம் தேதி, ராக்கெட்டில் கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்ப கோளாறுகள் சரிசெய்யப்பட்டு விட்டன. அனைத்து பணிகளும் முடிவடைந்து, விண்கலம் நல்ல நிலையில் உள்ளது என பேட்டியில் தெரிவித்தார் .

விண்ணில் ஏவப்பட்ட பின், சந்திரயான் - 2 விண்கலம், 48 நாட்களில், 15 கட்டங்களை கடந்து, நிலவின், தென் துருவத்தில் தரை இறங்கும்.  உலக அரங்கில், புதிய அறிவியல் கண்டுபிடிப்பாக, நிலவில் தண்ணீர் இருப்பதை, 'சந்திரயான் - -1' விண்கலம் கண்டுபிடித்தது. தற்போது, நிலவின் தென் துருவத்தில்,'சந்திரயான் - -2' விண்கலம் ஆய்வு செய்ய உள்ளதால், விஞ்ஞான ரீதியாக, தகவல்களை பெற முடியும். நிலவில் அடுத்தடுத்துள்ள  சாத்தியக்கூறுகளைத் அறிந்து உலகுக்கு தெரிவிக்கும் இஸ்ரோவின் இந்த சாதனைப்பணி சிறப்பானது ஆகும். 
உலகின் முன்னனி நாடுகளால் கூட  வெற்றிகரமாக முடிக்க முடியாத இந்த அரும்பெரும் ஆய்வை இந்தியா  நிலவில் செய்வது உலக அரங்கில் இந்தியாவின் தனித்தன்மையையும் ஆராய்ச்சி வல்லமையையும் எடுத்துரைக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Post a Comment

0 Comments