அன்பும் அறிவும் உடையோர் வாழ்வுதனில் இல்லறம் இனிதாகும்!.

சிவனும் சக்தியும் ஒன்று  என பெண்ணுக்கு பாதியாக தன்னை கொடுத்தவர் சிவன். பெண்ணுக்கு அந்நீதி விளைவித்ததை எதிர்த்து மகாபாரத யுத்ததை நடத்தினார் விஷ்ணு. தன்னில் பாதியாக மண்ணில் உயிர்களை ஜெனிக்க செய்யும் பெண்ணுக்கு என சரிசமமான இடம் தந்து பாதுகாத்து அவர்களை பாவிக்க இந்திய மண்ணில் பல சிறப்பான தருணங்களால் போதிக்கப்பட்டது.

இந்தியாவில் பெண்கள் கங்கையாக, காளியாக அனைத்து தருணத்திலும் பாதுகாக்கப்படுகின்றார்கள். அவளுக்கென தனி பாதுகாப்பு மற்றும் தனித்துவமான வாழ்வு கொடுக்கப்பட்டு வாழ்ந்து வரும் தருணத்தில் அவளுக்கென நான்கு அடி வரிகள் தந்து பெருமிதம்படுத்தினார் வள்ளுவ பெருமான்.

உலகத்திலுள்ளஅத்தனை ஜீவன்களுக்காகவும் ஒன்றரை அடியில் குறள் எழுதியவர் திருவள்ளுவர். ஒரே ஒரு ஜீவனுக்காக மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதி,  பெருமை சேர்த்துள்ளார். அந்த பெருமைக்கூரியவர் அவருடைய மனைவி வாசுகியாவார். தன்னுடன் வாழ்நாளை பங்கு கொண்டு வாழ்ந்தவர் வாசுகிக்கு தந்த பெருமிதமான வரிகளை காணும் பொழுது அவரின் சிறப்பை அறியப் பெறுகின்றோம்.

அந்த பெருமைக்குரியவர், அவரது மனைவி வாசுகி தான். அந்த அம்மையார் தனது கணவரின் செயல்பாடுகள் குறித்து வாழ்நாள் முழுவதும் விமர்சித்ததே இல்லை. அவர் செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தவர்.

தன் கணவர் சாப்பிடும் போது,
ஒரு கொட்டாங்குச்சியில் தண்ணீரும்,
ஒரு ஊசியும் வைத்துக் கொண்டுதான் சாப்பிடுவாராம்.


அது ஏன் என்று அம்மையாருக்கு விளங்கவேயில்லையாம். ஆனாலும் கணவரிடம் காரணத்தை எப்படி கேட்பதென்று அமைதியா இருப்பாராம். இதற்கான காரணத்தை அந்த அம்மையார் இறக்கும் தருவாயில் தான் கணவரிடம் கேட்டாராம்.

சோற்றுப்பருக்கை கீழே சிந்தினால் ஊசியில் குத்தி கொட்டாங்குச்சியில் உள்ள நீரில் கழுவி மீண்டும் சோற்றில் கலந்து உண்ணவே அவை இரண்டும் என்றாராம்.

நீ பரிமாறுகையில் சோற்று பருக்கை சிந்தவே இல்லை. அதனால் அதன் பயன்பாடு உனக்கு தெரியவில்லை என்று நெகிழ்ச்சியாக சொன்னாராம். வள்ளுவரின் இல்லத்துக்கு துறவி ஒருவர் வந்தார், அவர்கள் இருவரும் பழைய சாதம் சாப்பிட்டனர்.

அப்போது வள்ளுவர் வாசுகியிடம் "சோறு சூடாக இருக்கிறது, விசிறு என்றார். பழைய சோறு எப்படி சுடும்?" , அந்த அம்மையார் கேள்வியே கேட்கவில்லை.
விசிற ஆரம்பித்து விட்டார். இப்படி, கணவருடன் வாதம் செய்யாமல்
விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் கொண்டிருந்தார்.

அந்த கற்புக்கரசி ஒருமுறை கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார்
வள்ளுவர் அவரை அழைக்கவே, கயிறை அப்படியே விட்டு விட்டு வந்தார். குடத்துடன் கூடிய அந்தக் கயிறு அப்படியே நின்றதாம். இப்படி ஒரு மனைவி கிடைத்தால், அந்தக் கணவன் கொடுத்து வைத்தவன் தானே!

அந்த அன்பு மனைவி ஒருநாள் இறந்து போனார்.
“நெருநல் உளனொருவன்
இன்றில்லை எனும்
பெருமை படைத்து இவ்வுலகு”

என்று ஊருக்கே புத்தி சொன்ன அந்தத் தெய்வப்புலவரே மனைவியின் பிரிவைத் தாங்காமல் கலங்கி விட்டார்.
நேற்றிருந்தவர் இன்றைக்கு இல்லை என்பது தான் இந்த உலகத்திற்கே பெருமை என்பது இந்தக் குறளின் பொருள்.

ஆக தனது கருத்துப்படி அந்த அம்மையாரின் மறைவுக்காக
பெருமைப்பட்டிருக்க வேண்டிய அவர்
மனைவியின் பிரிவைத் தாளாமல்

"அடியிற்கினியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி
பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்-
இனிதா(அ)ய் என் தூங்கும் என்கண் இரவு".என்று ஒரு நாலு வரி பாட்டெழுதினார்.

அடியவனுக்கு இனியவளே!
அன்புடையவளே! என் சொல்படி நடக்கத் தவறாத பெண்ணே! என்
பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே!

பின் தூங்கி முன் எழுபவளே! பேதையே! என் கண்கள் இனி எப்படித்தான் இரவில்
தூங்கப் போகிறதோ! என்பது பாட்டின் உருக்கமான பொருள்.

இன்று சிறுசிறு கருத்து வேறுபாடுகளுக்கு கூட நீதிமன்ற வாசலில் நிற்கும் தம்பதியர் இந்தசம்பவத்தை நினைவு கூர்ந்து ஒருவருக்கொருவர் உணர்ந்து செயல்பட வேண்டும். அமைதி, பொறுமை, அன்பு, வார்த்தையில் கணிவு, காத்திருத்தல் இவை அனைத்தும் மிக முக்கியானது ஆகும்.

கணவன், மனைவி இருவரிடையே அன்பும் சமர்ப்பணமும் இருக்க வேண்டும். வெற்றியுடன் வாழ்வு தழைத்திருக்க பொருமை இருக்க வேண்டும் ஒருவருக்கொருவரிடையே பரஸ்பர பரிமாற்றம் இருக்க வேண்டும். எங்கும் நிதானம் இருக்க வேண்டும். நீங்கள் எந்த இடத்தில் இருந்தாலும் உங்கள் வாழ்க்கை துணையின் மகிமையை என்றும் மனதில் வைத்து வாழ வேண்டும். உன்னை நேசிக்கின்றேன் என் வாழ்வின் ஒளி நீயே என்று வாழ்நாள் முழுவதும்  தினசரி பரிமாறுங்கள் அது உங்கள் வாழ்வின் வெற்றியை தேடித் தரும். வாழ்வு செழிக்கும். 

ஒரு நிகழ்ச்சியில் வேதாத்திரி மகிரிஷி பேசிக் கொண்டிருந்தார். அதாவது இல்லற வாழ்க்கை சிறப்பாக அமைய விட்டுக் கொடுப்பது, அனுசரித்துப் போவது, பொறுத்துப் போவது ஆகிய மூன்று பண்புகளை பின்பற்ற வேண்டும் என்றார். அப்போது ஒரு பெண் எழுந்து, விட்டுக் கொடுப்பது என்று பொதுவாக சொல்கிறீர்கள். யார் விட்டுக் கொடுப்பது? கணவனா? மனைவியா? பிரச்சினை அங்குதானே ஆரம்பிக்கிறது, என்று கேட்டார்.

அதற்கு வேதாத்திரி மகரிஷி பதிலளிக்கையில், யாரிடம் அன்பு அதிகமாக இருக்கிறதோ, யார் அறிவாளியோ அவர்கள்தான் முதலில் விட்டுக்கொடுப்பார்கள். அவர்கள்தான் அனுசரித்துச் செல்வார்கள். அவர்கள்தான் பொறுத்துப் போவார்கள் என்றார்.

உங்கள் வீட்டில் இனி யார் விட்டுக் கொடுத்துப் போவது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
இருவரும் அறிவாளியாக இருந்தால் அதுவே கோவில் ஆகும். இருவரும் விட்டுக்கொடுத்தால் அதுவே இனிய இல்லறம் ஆகும். 

திருமணத்தில் இல்லற பரிமாற்றத்துடன் இரு ஆன்ம பரிமாற்றங்கள் நிகழ்கின்றன.  அவை அப்பழுக்கற்றவை அவற்றில் அன்பும் பண்புமே தலையாய குணங்களாக இருக்கும் அது எந்தளவிற்கு பின்ப்பற்றப்படுகின்றதோ அதே அளவு வாழ்வு சிறப்பாக இருக்கும். 

உங்கள் இல்லற வாழ்வின் கணவன் மனைவி என்ற இரு உறவுகளுக்குள் ஊடல்கள் இருப்பது சிறந்ததல்ல இரு உள்ளங்களுக்குள் உணர்வுகள் இருக்க வேண்டும் நாம் என்ற இதழ்களை  இணைத்து கூறும் ஒற்றுமை இருக்க வேண்டும். சொற்களில் இனிமை இருக்க வேண்டும்.  இவை இருந்தால் வாழ்வு ஒளிவெள்ளமே. 

மேலும் படிக்க:

Post a Comment

0 Comments